கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா பெரியகொட்டைகுளத்தை அடுத்த செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). இவர் சிறு தொழில் செய்வதற்காக மும்முனை மின்சாரம் பெறுவதற்கு கல்லாவி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.
மும்முனை மின்சாரம் பெறுவதற்காக கட்டணமாக ரூ.17 ஆயிரத்தையும் செலுத்தினார். ஆனால், அவருக்கு மின் இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் (42) என்பவரிடம் கிருஷ்ணன் கேட்டார். அதற்கு அவர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் தந்தால் உடனே மின் இணைப்பு வழங்குவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேஷ் இதுதொடர்பாக கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவப்பட்ட ரூ.10 ஆயிரத்தை கல்லாவி மின்வாரிய அலுவலகத்தில் இருந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேஷிடம் கொடுத்தார்.
இதனை மறைந்திருந்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கண்காணித்தனர். அவர்கள், அலுவலகத்துக்குள் அதிரடியாக சென்று லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளர் ராஜேசை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்தனர்.
கைதான செயற்பொறியாளர் ராஜேசுக்கு, தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அதிகாரப்பட்டியை அடுத்த செங்காட்டுபள்ளி சொந்த ஊராகும்.
No comments:
Post a Comment