கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பீர்ப்பள்ளி பக்கமுள்ள மல்லசந்திரத்தை சேர்ந்தவர் சுமன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் நண்பர்களை பார்ப்பதற்காக பெரிய குதிபாலா பக்கமாக சென்றார். அப்போது, முரளி, சேட்டு, ரஞ்சித், அன்பு ஆகியோர் சுமனின் நண்பர் சின்னதம்பியுடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தனர். அதை சுமன் கண்டித்தார். அப்போது ஆத்திரம் அடைந்த முரளி உள்ளிட்ட 4 பேரும் சுமனை கட்டையால் தாக்கினார்கள்.
அதில் காயம் அடைந்த சுமன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், முரளி உள்ளிட்ட 4 பேர் மீதும் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தலைமறைவாக உள்ள அந்த 4 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி பீர்பள்ளி மற்றும் மல்லசந்திரம் கிராமத்தை சேர்ந்த கிராமமக்கள் நேற்று சூளகிரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். பின்னர், முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment