தேசிய அளவில் தமிழகத்திற்கு தங்கம் வென்று வேப்பனப்பள்ளியை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் அசத்தல். இந்தியாவிற்காக பாராஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம் என பேட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கோடிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் 23. தற்போது M.Com இறுதியாண்டு படித்து வருகிறார். பிறக்கும் போதே இரு கைகளும் இல்லாமல் மாற்றுத்திறனாளியாக பிறந்த மகேஷ் சிறு வயதில் தாயை இழந்து தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் தனது பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்துள்ளார். சிறுவயதிலிருந்தே பாட்டியின் கடின உழைப்பில் மகேஷ் வளர்ந்துள்ளார். மாற்றுதிறனாளியாக இருந்தாலும் சிறுவதிலியே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகம். ஊருக்குள் சிறுவர்கள் விளையாடும்போது நீச்சல் அடித்தல், ஓட்டபாந்தயம், கோகோ, கிரிகெட், செஸ் மற்றும் கேரம் போட்டிகளில் அதிக அளவில் விளையாடி வந்துள்ளார்.
இந்தநிலையில் பாட்டியின் வளர்ப்பில் வளர்ந்து வந்த மகேஷ் தீடிரென்று பாட்டி இறந்து விட செய்வதறியாமல் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது நீச்சல் போட்டியில் உள்ள திறமையையும் ஆர்வத்தையும் கண்ட விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர் சபரி என்பவர் மகேஷ்க்கு தனது படிப்பைத் தொடர உதவி செய்துள்ளார். இதையடுத்து நாமக்கல்லில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் சேர்ந்து தனது படிப்பை தொடர்ந்துள்ளார். அங்கு அவர் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தனது இரு காலால் எழுதி அசத்தி வெற்றிகரமாக படிப்பை முடித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து விடா முயற்சியில் நீச்சல் பயிற்சியில் ஆர்வம் கொண்ட மகேஷ் பள்ளி படிக்கும்போதே அப்பகுதியில் நண்பர்கள் பழக்கத்துடன் கிராமங்களில் கிணறுகளிலும் குளங்களிலும் நீச்சல் பயிற்சியில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக பள்ளியில் படிக்கும்போதே மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகளில் விளையாடி பரிசுகளை வென்றுள்ளார். தொடர்ந்து இவருடைய முயற்சியையும் தன்னம்பிக்கையும் திறமையும் கண்ட தன்னர்வலர் சபரி சென்னையில் ஒரு நீச்சல் பயிற்சி அகடமி பயிற்சிக்காக இவரை சேர்த்துள்ளார். அங்கு மகேஷின் தன்னம்பிக்கையும் திறமையையும் கண்ட பயிற்சியாளர் அவருக்கு தீவிர நீச்சல் பயிற்சி அளித்துள்ளார். இதையடுத்து தீவிர நீச்சல் பயிற்சியின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார்.
இவருடைய திறமையின் மூலம் கடந்த வருடம் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா மாற்றுத்திறனாளிகள் நீச்சல் போட்டியில் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவங்கு சென்று மகேஷ் முதன் முறையாக தமிழகத்திற்கு வெள்ளிப் பதக்கம் வென்ற வந்தார்.
இதைதொடர்ந்து இந்த ஆண்டும் மகேஷுக்கு வாய்ப்பளித்த நிலையில் உத்தர பிரதேசத்தில் உதயபூரில் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா மாற்றுத் திறனாளிகள் நீச்சல் போட்டியில் தமிழகத்திற்கு இரண்டவது முறை தங்கம் வென்று அசத்தியுள்ளார். பிறவியிலேயே கைகள் இல்லை என்றாலும் தனது தன்னம்பிக்கையை கொண்டு வாழ்வில் ஏதாவது ஒரு சாதனையை செய்து விடவேண்டும் என்று தன்னுள் இருந்த திறமையை நம்பிக்கையும் விடா முயற்சியும் அவரை தற்போது தமிழகத்திற்கு தங்கம் வென்று வந்த தங்கம் மகனாக வலம் வருகிறார்.
மேலும் பாரா ஒலிம்பிகில் பங்கேற்று இந்தியாவிக்கு தங்கம் வென்று வருவதே தனது கனவாகவும் லட்சியமாகவும் உள்ளதாக மகேஷ் கூறி வருகிறார்.
No comments:
Post a Comment