தகவல் மறுத்ததற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு; ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 30 December 2025

தகவல் மறுத்ததற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு; ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.


ஊத்தங்கரை, டிச.30:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act, 2005) நடைமுறைகளை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தகவல் வழங்கத் தவறியதற்காக ரூ.10,000 இழப்பீடு வழங்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, அந்த அலுவலகத்தின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஊத்தங்கரை கல்லாவி அடுத்த செங்கழநீர்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் வேடி என்பவர், பெரியகொட்டகுளம் ஊராட்சியில் 15.08.2022 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத் தீர்மானத்தின் நகலை வழங்குமாறு, 29.08.2022 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். சட்டப்படி 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டிய தகவல், எந்த காரணமும் தெரிவிக்காமல் வழங்கப்படாததால், மனுதாரர் 10.10.2022 அன்று சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையம்-க்கு புகார் மனு அளித்தார்.


இந்த புகார் தொடர்பாக 14.11.2025 அன்று நடைபெற்ற விசாரணையில், மனுதாரருக்கு உரிய தகவல் வழங்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் பிரிவு 19(8)(b)ன் கீழ், மனுதாரருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


மேலும்,

  • இழப்பீடு வழங்கப்பட்ட விவரம்

  • பிரிவு 20(1) மற்றும் 20(2)ன் கீழ் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்க அறிக்கை

இவ்விரண்டையும் 21.01.2026-க்குள் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே இதே அலுவலகம், தகவல் மறுப்பு தொடர்பாக இரண்டு முறை இழப்பீடு மற்றும் அபராதம் செலுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து அபராதம் மட்டும் கட்டி தப்பித்து வரும் ஊத்தங்கரை BDO அலுவலகத்தின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கமான வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை புறக்கணித்து வரும் இந்த போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad